அக்கரைப்பற்று ஆலிம்நகர் விவசாய விரிவாக்கல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜி.பிர்னாஸ் ஹரீஸ் தெரிவித்தார்.
பரசூட் முறையிலான நெல் விதைப்பு முறையானது, சாதாரணமான விதைப்பு முறையை விட மாற்றமான வினைத்திறனுடனான விதைப்பு முறையாகும். தட்டுகளில் விதை நெல்லை முளைக்கச் செய்து நெல் நாற்றுக்களை பயிரிடுவதன் மூலம் கூடுதலான விளைச்சலை பெற முடியும்.
சாதாரணமாக வீசி விதைக்கும் போது கூடுதலான விதை நெல் தேவைப்படும். பரசூட் முறையிலான நெல் விதைப்புக்கு ஆரம்ப செலவுகள் குறைவாக காணப்படுவதோடு, களைகட்டுப்பாடு மற்றும் வேளாண்மைகள், நோய் நிலைமையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைவாக காணப்படுமெனவும் அவர் தெரிவித்தார். பரசூட் முறையிலான நெல் விதைப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆகக் குறைந்த விதை நெல் 08 தொடக்கம் 12 கிலோகிராம் தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்தார். பரசூட் முறையிலான நெல் விதைப்பை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கும் பொருட்டு முன்னோடியாக ஆலிம் நகர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு விவசாய திணைக்களத்தினால் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உரம் என்பன இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பரசூட் முறையிலான நெல் விதைப்பினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை வெற்றியளித்துள்ளதாகவும், கூடுதலான விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒலுவில் விசேட நிருபர்