- இந்திய முதலீட்டாளர்களுடன் விசேட விமானத்தில் களத்திற்கு சென்று நேரடியாக ஆராய்வு
- சுமார் 2000 இளைஞர் யுவதிகளுக்கு நேரடியாகவும் மேலும் 2000 பேருக்கு மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் 400 ஏக்கர் நிலப் பரப்பில் அமையவுள்ள ஆடைத் தொழில் முதலீட்டு வலயப் பிரதேசத்தை, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளது. ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரை பிரதேசத்தில் அமையவுள்ள மேற்படி ஆடைத் தொழில் முதலீட்டு வலயத்தின், அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன் போது அங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேற்படி இந்திய முதலீட்டாளர்கள் குழு வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அகமட்டுடன் நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு விமானத்தில் புறப்பட்டு அந்த முதலீட்டு வலயத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆடை உற்பத்தி தொடர்பான பாரிய கைத்தொழில் வலயமாக இந்த ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் ஆரம்பிக்கப்பட வுள்ளது.
அங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் இந்த ஆடைக்கைத்தொழில் முதலீட்டு வலயத்தை அமைப்பதற்கு, கடந்த 2020 அக்டோபர் 26ஆம் திகதியன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதனையடுத்து புன்னைக்குடா கடற்கரைப் பகுதியில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயத்திற்கான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த முதலீட்டு வலயத்திற்கென சிபாரிசு செய்யப்பட்ட 400 ஏக்கர் காணியில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான 275 ஏக்கர் காணி ஏற்கனவே இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்டு அங்கு மின்சாரம், நீர் விநியோகம், வீதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்