யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதியொன்றினுள் மதுபான விற்பனை நிலையமொன்றை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கமைய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப்போகக்கூடும் என பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
நெடுந்தீவு சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம், ஊர்வலமாக சென்று பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தனர். அதனைதொடர்ந்து அரசாங்க அதிபருடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
யாழ். விசேட நிருபர்