மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் பேசாலை பகுதியிலுள்ள அரச ஊழியரொருவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சம்பவம் தினத்தன்று மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் மனைவி வழமைபோன்று காலையில் அலுவலகம் சென்றுள்ளார்.
பின்னர் பிரபல பாடசாலையில் பிரதி அதிபராக கடமைபுரியும் கணவன் பாடசாலை விடுமுறை காரணமாக பிள்ளைகளுடன் வெ ளியில் சென்றுள்ளார். இதன்போதே இக்கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுள்ளார்.
இதன்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் தாலிக்கொடி உட்பட பதின்மூன்று பவுன் தங்கநகைகளும் ஐம்பதாயிரம் ரூபா பணமும் களவாடிச் செல்லப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருடனை கண்டுபிடிக்கும் நோக்குடன் பொலிஸ் மோப்பநாய் கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதுவரைக்கும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தலைமன்னார் விசேட நிருபர்