IPL 2024 தொடரின் 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த சிஎஸ்கே அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போதும் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானதாக இருக்குமா? என்று கேள்வி அனைவருக்கும் இருந்தது.
எனினும் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் மிக அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தியது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் அது மற்ற 9 அணிகளுக்கும் புள்ளி பட்டியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டு இருந்த நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று 9 அணிகளுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. மற்ற 9 அணிகளும் பிளே ஆஃப் செல்ல அதிக போட்டிகளில், அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 32 ஓட்டங்களும், டேரில் மிட்செல் 30 ஓட்டங்களும், ரவீந்திர ஜடேஜா 43 ஓட்டங்களும் எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் ராகுல் சாஹர் 3 விக்கெட்களும், ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்களும் எடுத்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் 2, சாம் கர்ரன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து சிஎஸ்கே அணி பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்களை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். சிமர்ஜீத் சிங் 3 ஓவர்களில் 16 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஷர்துல் தாக்குர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். மிட்செல் சான்ட்னர் பவர் பிளே ஓவர்களில் அபாரமாக பந்து வீசி 3 ஓவர்களில் 10 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் 30 ஓட்டங்களும், ஷஷாங் சிங் 27 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.