நடப்பு IPL சீசனின் 32ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. 90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி அதனை விரைவாக எட்டி இருந்தது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணியின் பவுலர் முகேஷ் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஸ்டப்ஸ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். அக்சர் படேல் மற்றும் கலீல் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரட்டியது. பிரித்வி ஷா மற்றும் ஃப்ரேசர் மெக்குர்க் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். தொடக்கம் முதலே இலக்கை விரைந்து எட்ட முயன்றது அந்த அணி. பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்திருந்தது டெல்லி.
மெக்குர்க் 20, அபிஷேக் போரல் 15, ஷாய் ஹோப் 19, பிரித்வி 7 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். சுமித் குமார் 9 ஓட்டங்கள் மற்றும் பந்த் 16 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.
8.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 92 ஓட்டங்கள் எடுத்தது டெல்லி. இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. கடந்த சில நாட்களாக நடைபெற்ற நடப்பு IPL சீசன் போட்டிகளில் சுமார் 200+ ஓட்டங்கள்அணிகள் எட்டி இருந்தன. இது சென்னை – மும்பை, பெங்களூரு – ஹைதராபாத், ராஜஸ்தான் – கொல்கத்தா போட்டிகளில் பார்க்க முடிந்தது.
இந்த சூழலில் நேற்று (17) நடைபெற்ற போட்டியில் மொத்தமாகவே 181 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. IPL கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குஜராத் அணி எடுத்த மிகக் குறைந்த ஓட்ட்களாக டெல்லி உடனான இந்தப் போட்டி அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது டெல்லி கேப்பிட்ல்ஸ்.