நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவடையும் அதேவேளையில் தொழிலாளர்களுடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்று தொட்டு இன்று வரை தொழிலாளர்களுடைய உழைப்பு முதலாளி வர்க்கத்தினால் சுரண்டப்பட்டு வருகின்றது.
தொழிலாளர்களுடைய உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகள் உள்ள போதிலும் போதிய விழிப்புணர்வு இன்மையால் இன்றும் தொழிலாளர்களுடைய உழைப்பும் உரிமையும் சுரண்டப்படுகின்றது.
எமது நாடு அண்மையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருந்தது.அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தொழிலாளர்களால் மட்டுமே முடியும்.
உள்ளூர் உற்பத்திகள் மீளவும் அதிகரிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் உள்ளூர் உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றது.உழைப்பால் உயர்ந்த எம் இனம் மீளவும் பொருளாதாரத்தில் தன்னிறைவு காண இந்த உழைப்பாளர் தினத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் இன்று உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் சகல தொழிலாளர்களுக்கும் எனது தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மனமகிழ்வடைகிறேன் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)