தேங்காய்ப் பால் ஏற்றுமதி மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,971 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்படும் மாதாந்த ஏற்றுமதி அறிக்கைக்கு அமைவாக, பெப்ரவரி மாதத்தில் 6,739 மெற்றிக் தொன் தேங்காய்ப் பால் ஏற்றுமதியின் மூலம் இந்த வருமானம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஆண்டு பெப்ரவரி மாதம் 4,366 மெற்றிக் தொன் தேங்காய்ப் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு 2,401 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பாலின் அளவைப் பொறுத்தமட்டில், 2023ஆம் ஆண்டை விட 2024 ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 2,373 மெற்றிக் தொன் அதிகரித்துள்ளதுடன், ஏற்றுமதி வருமானமும் 570 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கடும் வரட்சியையடுத்து பெய்த மழையால், தென்னை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இலங்கையில் 2023 ஆண்டு நவம்பர் மாதத்தில் 22 வீதமும், டிசம்பரில் 05 வீதமும், 2024 ஜனவரியில் 18 வீதமும், பெப்ரவரியில் 25 வீதமும் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.