யூதாஸ் இராப்போசன அறையிலிருந்து வெளியேறியபோது ‘அது இரவு நேரம்’ என்று நற்செய்திக் குறிப்பு கூறுகின்றது.
அந்த இரவு நேரம் இயேசுவிற்கு உண்மையிலேயே இருள் சூழ்ந்த நேரமாகும். அவ்விரவில் யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுப்பான். அவ்விரவில் பேதுரு அவரை மும்முறை மறுதலிப்பார். அவ்விரவில் பதினொரு திருத்தூதர்களும் அவர் கைது செய்யப்படும் போது அவரை விட்டுவிட்டு ஓடிப்போவார்கள்.
அவருக்கு நெருக்கமானவர்களால் அவருக்கு காட்டிக்கொடுப்பு, மறுதலிப்பு, கைவிட்டுச் செல்லல் நிகழும். உண்மையில் அவ்விரவு இருள் சூழ்ந்த இரவாகும்.
ஆயினும் அக்காட்சியில் நமக்குச் சொல்லப்படுவது “உலகிலிருந்த தம்மவர் மேல் அன்பு கூர்ந்த அவர், அவர்களை இறுதி வரையும் அன்பு செய்தார்’ என்பதாகும். அவர் இருளின் நடுவில் ஒளியாவார்.
இயேசு தமது இறுதிப் பிரியாடை உரையில் பின்வரும் உறுதிமொழி நிறைந்த வார்த்தைகளால் தம் சீடர்களை ஆறுதல் படுத்துகின்றார். “நான் உங்களுக்காக இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன். நானிருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்.”“நானும் தந்தையிடம் கேட்பேன் அவர் உங்களுக்கு உங்களுடன் இருக்க வேறொரு துணையாளரைத் தருவார்.”
இவ்வார்த்தைகள் இன்றைய முதலாம் வாசகத்தில் பேசப்பட்ட ஏசாயாவின் துன்புறும் ஊழியன் இரண்டாம் கவிதையினை வெளிப்படுத்துகின்றன.
இவரூடாகவே கடவுள் தமது மாட்சியினை வெளிப்படுத்துவார். இவரையே கடவுள் உலகிற்கு ஒளியாகத் திகழச் செய்வார்.
இத்தகைய உயிருள்ள வார்த்தைகள் இருளும் வேதனையும் வலியும் நிறைந்த வேளைகளில் நமக்கு ஒளியாகத் திகழ்கின்றன. இவற்றினூடாக மீட்பரும் ஆண்டவரும், சிலுவையில் அறையப்பட்டவரும் உயிர்த்தெழுந்தவரும், கடவுளின் ஒளியும் வாழ்வுமாகிய இயேசு நம்மோடும், காயப்பட்ட உலகோடும் பிரசன்னமாகின்றார்.