உடல் இச்சையைக் கட்டுப்படுத்தி உளக்கட்டுப்பாட்டை உருவாக்குவதுதான் நோன்பின் நோக்கம். இரண்டில் ஒன்று விடுபட்டாலும் எதிர்பார்ப்பு வீணாகிவிடும்.
நோன்பு சில வணக்கங்களின் கூட்டுக்கலவை எனக் குறிப்பிடலாம். ‘கியாமுல்லைல்’ எனும் ரமழான் மாத இரவு வணக்கம், ‘ஸதகா’ எனும் தானதர்மம், ‘இஃதிகாஃப்’ எனும் பள்ளிவாசலில் இரவு தங்குதல், ‘திலாவத்’ எனும் திருமறைக் குர்ஆன் ஓதுதல், ‘லைலதுல் கத்ர்’ எனும் மாட்சிமை மிக்க ஓர் இரவை அடைவதற்காக நம்மைத் தயார் செய்தல், ஆகிய ஐந்தும் கலந்த கூட்டு வணக்கம்தான் நோன்பு ஆகும்.
மனிதனை உயர் ஒழுக்கம் கொண்டவனாகவும், பண்பாடு மிக்கவனாகவும் மனிதனை மாற்றுவதற்கான நல்லொழுக்கப் பயிற்சிதான் இது. இப்பயிற்சியை சரிவர நிறைவேற்றுபவன் நல்ல பிரஜையாகவும், சிறந்த மனிதனாகவும், சமூகத்திற்குப் பயன்மிக்கவனாகவும் திகழ்வான்.
இந்த அடிப்படையிலேயே ‘தக்வா’ எனும் இறையச்சத்தை உருவாக்குவதுதான் நோன்பின் அடிப்படை நோக்கம். இறையச்சம் உடைய மனிதன் பண்பாடு மிக்கவனாகப் பரிணாமம் பெறுகிறான். பண்பாடு மிக்கவன் நல்ல மனிதனாக இருப்பான். இப்பண்பாட்டுப் பயிற்சியை தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
தொழுகை என்பது வெறும் இறை வணக்கத்திற்காக மட்டுமுரியதல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக நம்மில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
ஏனைய இறை வணக்கங்கள் அனைத்தும் தனியொரு வணக்கமாக இருக்கும்போது நோன்பு மட்டும் உடல், உளக்கட்டுப்பாடு இரண்டையும் ஒருசேர உள்ளடக்கியிருக்கிறது. ஏனெனில் நம்மில் இறையச்சம் உருவாக வேண்டும் என்பதுவே அதன் எதிர்பார்ப்பாகும். இதற்கு பக்க துணையாக இரவு வணக்கமும், அல் குர்ஆன் ஓதுதலும், தான தர்மமும் அமைந்திருக்கிறது.
நபி (ஸல்) அவர்களிடம் அபூ உமாமா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே…! எனக்கு ஒரு நற்செயலைச் சொல்லித்தாருங்கள்’ என்று கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பைப் பற்றிப்பிடித்துக்கொள், அதற்கு நிகர் எதுவும் கிடையாது’ என்றார்கள்.
(ஆதாரம்-: நஸாயீ)
இது குறித்து ஹதீஸ் குத்ஸியில், ‘ஆதத்தின் பிள்ளைகள் செய்யும் அனைத்துச் செயல்களும் அவர்களுக்குரியன, நோன்பைத் தவிர. நோன்பு எனக்கானது. நானே அதற்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்தஆலா குறிப்பிடுவதாகப் பதிவாகியுள்ளது.
(ஆதாரம்-: புஹாரி, முஸ்லிம்)
அனைத்து நற்செயல்களும் அல்லாஹ்வுக்காகவே புரியப்படுகின்றன. அதற்கான கூலியையும் அவனே வழங்குவான். அப்படியிருக்க.. நோன்புக்கு மட்டும் என்ன தனிச்சிறப்பு என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனாலும் அதற்கான பதிலையும் அல்லாஹ்வே ஹதீஸுல் குத்ஸியின் வாயிலாகக் கூறுகின்றான்..
‘அவன் எனக்காகவே உணவை விடுகின்றான். பானத்தையும் எனக்காகவே விடுகின்றான். மனோஇச்சையை எனக்காகவே விடுகின்றான்’
(ஆதாரம்-: இப்னு குஸைமா)
இங்கு உடல், உளக் கட்டுப்பாடு இரண்டையும் ஒருசேர இறைவன் குறிப்பிடுகின்றான். எனவே நோன்பு நோற்பவருக்கு உண்மையிலேயே பசி ஏற்பட வேண்டும். அந்தப் பசியை இறைவனுக்காகத் தாங்கிக்கொள்ள வேண்டும். மேலும் நோன்பு நோற்பவருக்கு உண்மையிலேயே தாகம் ஏற்பட வேண்டும். அந்தத் தாகத்தை இறைவனுக்காக அவர் தாங்கிக்கொள்ள வேண்டும். மனோ இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். பசியும் தாகமும் இருந்தால்தான் உடலின் வீரியம் குறையும். உடலின் வீரியம் குறைந்தால் தான் பாவ காரியங்களைச் செய்யாமல் இருப்பதற்கான மனப்பக்குவம் வரும்.
நோன்பின் பகல் பொழுதுகளில் உணவு, பானம் ஆகியவை நமது உடலினுள் சென்றுவிடாமல் இருப்பதில் எவ்வாறு பேணுதலுடன் நடந்து கொள்கிறோமோ அவ்வாறு மனக்கட்டுப்பாட்டிலும் பேணுதலுடன் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நோன்பு குறித்துக் கூறும்போது, சாப்பிடுவதைக் குறித்து மட்டும் கூறவில்லை மாறாக மனக்கட்டுப்பாட்டையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளார்கள்.
அதேநேரம், ‘எத்தனையோ நோன்பாளிகள், நோன்பினால் அவர்கள் அடைந்த பலன், வெறும் பசியும் தாகமும் தான்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்-: நஸாயீ, இப்னுமாஜா)
இந்நபிமொழியின் ஊடாக, ‘வெறும் பசியும் தாகமும் மட்டுமல்ல நோன்பு. மாறாக உடற்பயிற்சியும் மனக்கட்டுப்பாடும் சேர்ந்ததுதான் நோன்பு’ என்பது தெளிவாகிறது. இதனை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள், ‘எவர் (நோன்பு நோற்றிருந்தும்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை. (ஆதாரம்: புஹாரி)
நோன்பாளி தவறான செயலில் ஈடுபட்டால் அவன் நோன்பே வைக்கவில்லை என்றுதான் பொருளாகும். எவ்வாறு தண்ணீர் குடிப்பது நோன்பை முறிக்குமோ அவ்வாறே பாவச்செயல்களில் ஈடுபடுவதும் நோன்பை முறிக்கக்கூடியதாகவே அமையும்.
நோன்பாளி பாவச்செயல்களில் ஈடுபட்டால் அந்த நோன்பு பயனற்றுப் போய்விடும். அதனால் நோன்பு என்பது இரு பகுதிகளை உள்ளடக்கியது என்பதை மறந்துவிடலாகாது. நோன்பின் நோக்கம் குறித்து பிரபலமான இறைவசனம், ‘நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்’ (2:183) என்று குறிப்பிடுகிறது.
நோன்பில் உளப் பயிற்சியை அளிக்கும் நற்கருமங்களாக இரவுத்தொழுகையும், தானதர்மமும், திருக்குர்ஆன் ஓதுதலும், இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்குதலும், லைலதுல் கத்ர் இரவுக்காகத் தயாராவதும் சிறப்பு வணக்கங்களாக ரமழானில் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒருமாத காலம் உடல், உளப்பயிற்சியைப் பெற்றுக்கொண்ட ஒருவர் ரமழானுக்குப் பின்னரும் நிச்சயம் இதனைக் கடைப்பிடிப்பார். அதுதான் நோன்பின் நோக்கம். ரமழான் நோன்பு என்பது ரமழானுக்காக மட்டுமுரியதல்ல அது ரமழானையும் தாண்டி நிற்கும் பதினோரு மாதங்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சியாகும்.
ஆகவே, உடற்பயிற்சியோடு உளப்பயிற்சியும் சேரும்போதுதான் நோன்பின் உண்மையான பலனை அடைந்துகொள்ள முடியும் என உறுதிபடக்கூறலாம்.
மின்ஸார் இப்றாஹிம்…