சர்வதேச நாணய நிதியத்தின் 02 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும்
இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், அதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
இலங்கை அமுல்படுத்தியிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைத்திட்டத்தின் பிரதிபலன்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகவும், அதனூடாக சாதகமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் நேற்று மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தில் வெற்றிகரமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதுடன் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அரச நிதிச் சீர்திருத்தங்களுக்குப் பின்னர் அரச நிதி வலுப்பெற்றுள்ளதாகவும் 2024 பிப்ரவரி மாதமளவில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகாரப்பூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளதாகவும் தொடர் முன்னேற்றம் அடைய வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூயர் நேற்று தெரிவித்தார்.