கிழக்கு மாகாண பாடசாலையொன்றில் மரதன் ஓட்டப் போட்டியின் போது திடீர் சுகவீனம் ஏற்பட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வியமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கல்வியமைச்சு அண்மையில் பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
இதனையும் மீறி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், மாணவனின் மரணம் தொடர்பில் கல்வியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்வியமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி கிழக்கு மாகாணத்திலுள்ள திருக்கோவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 16 வயது மாணவன், திடீர் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனை அம்பாறை வைத்தியசாலையில் நடைபெற்றது. அதேவேளை, மரதன் ஓட்டம் போன்ற நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு முன்னர் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பது அவசியம் என விசேட மருத்துவர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். மரணத்திற்கான பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும் துரதிர்ஷ்டவசமாக உடலில் நீரிழப்பு காரணமாகவும் மரணங்கள் ஏற்படலாம். நீண்ட தூரப் போட்டிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டு, உடல்நிலையை உறுதி செய்த பின்னரே விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர்கள் இதை கருத்திற் கொள்ள வேண்டும்.
லோரன்ஸ் செல்வநாயகம்