நாட்டில் தற்போது நிலவும் அதி கூடிய வெப்ப நிலை, எச்சரிக்கை மட்டத்தை விட தொடர்ந்தும் நீடிக்குமென்பதால் சிறுவர், முதியவர் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதிகளவு வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அடிக்கடி அதிகளவு நீரை பருகுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்,குழந்தைகள், முதியவர், நோயாளர் ஆகியோர் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை,மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளவர்கள் போதுமானளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.
முதியவர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ளுமாறும், சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டாமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்