நேற்றிரவு பிடிகல மற்றும் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளனர்.
பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்று (11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சசித் மதுஷங்க என்ற நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 வயதான கவிஷ்க அஞ்சனவும் இன்று (12) அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், T-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் எல்பிட்டிய வைத்தியசாலையிலும் மேலும் இருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் நேற்று இரவு 8.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில், ஹலம்ப உதேஷ் மதுஷங்க என்ற பொடி மெந்திஸ் என்ற நபரும் மற்றும் தடல்லகே சித்தும் அங்ஜன என்ற சுது இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொகு சத்துர என்ற சத்துர மதுஷங்க, பத்தினி வசம் அகில மற்றும் சங்கமகே சம்பிக்க துஷார ஆகியோர் காயமடைந்த தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.