கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களாகிய 80களின் குழுவினால் நடத்தப்படும் அழைப்பு பாடசாலைகளுக்கு இடையான ”14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம் – 2024” உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் போட்டிகள் இந்த மாத முற்பகுதியில் ஆரம்பமாகின. நொக் அவுட் முறையில் இடம்பெறும் இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிமை (18) கொழும்பு, சுகததாச அரங்கில் இடம்பெற்றன.
இதன் முதல் அரையிறுதியில் புனித தோமஸ் கல்லூரி வீரர்கள் 6-1 என்ற கோல்கள் கணக்கில் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி அணியையும், இரண்டாவது அரையிறுதியில் போட்டி ஏற்பாட்டாளர்களான ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி வீரர்கள் 3-0 என்ற கோல்கள் கணக்கில் கேட்வே கல்லூரியையும் வீழ்த்தி மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கிண்ணத்தை வெல்லும் அணியைத் தீர்மானிக்கும் தொடரின் இறுதிப்போட்டியானது எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சுகததாச மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மின்னொளியின் கீழ் நடைபெறும் என்று போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அர்ஷாட் அன்வர்தீன்