இலங்கை இராணுவத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் புதிய காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி 243 படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி 243 படைப் பிரிவின் பிரிகேடியர் சந்திம குமாரசிங்க கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ெடாக்டர் எம்.எஸ். எம். ஜாபீர், காத்தான்குடி நகரசபை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெசீம், காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் கே.எல்.எம்.பரீட், சமூக செயற்பாட்டாளர் கே.எல்.எம்.கலீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. எம் ஐ.எம்.மஸாகிறா என்பவரின் பயனாளிக் குடும்பத்துக்கு இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. 45 இலட்சம் ரூபா செலவில் இலங்கை இராணுவத்தின் முழு உதவியுடனும் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பயனாளியிடம் வீடு கையளிக்கப்படவுள்ளது.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்