கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சாரதி வெலிசற நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி அதிகாலை கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.01 கிலோமீற்றர் மைல்கல் அருகில், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம், அதே திசையில் அதற்கு முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி இவ்விபத்து ஏற்பட்டிருந்தது.
இவ்விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரும் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்தை செலுத்திய அவரது சாரதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.