புத்தளம் – கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 7 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி மண்டல்குடாவைச் சேர்ந்த 65 வயதுடைய சாஹூல் ஹமீட் எனும் குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்தில் நேற்று (04) இடம்பெற்ற சுதந்திரத் தின நிகழ்வுகளைப் பார்வையிட்ட பின் கற்பிட்டி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, எதிர்த் திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கற்பிட்டியிலிருந்து வந்த முச்சக்கர வண்டியில் பின் புறத்தில் இருந்து பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த குழந்தை உட்பட 7 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் 5 பேர் புத்தளம் தள வைத்தியசாலையிலும், இருவர் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்த நபரின் மனைவி , மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம், விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீதான மரண விசாரணையை நடத்தினார்.
இந்த விபத்து இடம்பெற்ற போது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட விபத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்