அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான தரவுகள் பிரதேச செயலகங்கள் ரீதியாக திரட்டப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்தார்.
வடகீழ் பருவ பெயர்ச்சி மழை மற்றும் சேனநாயக்க நீர்ப்பாசன குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் சேதமடைந்த உட்கட்டுமானம், அரச கட்டடங்கள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், வீதிகள், மதகுகள், தனியார் சொத்துகள், வீடுகள் போன்றவை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், விவசாய உதவி ஆணையாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆகியோரிடமும் பாதிப்பு தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.
மீள் கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்காக சேத விபரங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தம் தொடர்பான சேத விபரங்களை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸிடம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
(ஒலுவில் விசேட நிருபர்)