இஸ்லாமிய உலகுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக மக்கா மதீனா ஆகிய இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் 2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 1,000 பிரமுகர்களுக்கு இலவசமாக உம்ரா நிறைவேற்றும் அரிய சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இது இஸ்லாமிய விவகாரங்கள் அழைப்பு மற்றும் நேர்வழித்துறை அமைச்சு செயல்படுத்தி வரும் ஹஜ் உம்ராவுக்காக விருந்தினர்களை அழைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது தொடர்பாக இஸ்லாமிய விவகாரங்கள் அழைப்பு மற்றும் நேர்வழித்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லத்தீஃப் அல்-ஷேக் தனது செய்தியில், தாராள தன்மையுடன் வழங்கப்பட்ட 1000 யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் உம்ரா சலுகைப் பொதியை முன்னிட்டு மன்னருக்கும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வானது இஸ்லாத்துக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ் முஸ்லிம்களுக்கு சேவையாற்றுவதிலும் அவர்களுக்கிடையிலான சகோதரத்துவப் பிணைப்புகளை வலுப்படுத்துவதிலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சவூதி ஆட்சியாளர்களுக்குள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகின்றது என்று அவர் கூறினார்.
மேலும் உம்ரா திட்டத்தின் ஊடாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இஸ்லாமிய அறிஞர்கள் ஷேக்குமார்கள் அறிவுஜீவிகள் செல்வாக்குமிக்க நபர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என 1000 பிரமுகர்கள் இலவசமாக உம்ரா செய்யவும் மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன்னபவியில் தொழவும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை தரிசிக்கவும் அரிய சந்தர்பமாகும் என்றும் அல்-ஷேக் கூறினார்.
இஸ்லாத்தை பரப்புவதற்கும் அதன் கொள்கைகளையும் மதிப்புகளையும் விளக்குவதற்கும் வெறுப்பு மதவெறி மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் சவூதி ஆட்சியாளர்கள் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சுக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.
மேலும் மன்னர் சல்மான் பட்டத்து இளவரசர் முகம்மத் இப்னு ஸல்மான் ஆகியோர் மூலமாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் சேவைகளை வழங்கவும் உலக முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்தவும் ஹஜ் உம்ரா பயணிகள் வசதியாக அமல்களை நிறைவு செய்தபின் பாதுகாப்பாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பவும் அவர் பிரார்த்தனை செய்தார்.
-கலாநிதி அப்துல் சத்தார் விரிவுரையாளர், காஸிமிய்யா அரபுக்கல்லூரி