இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றில் எந்தவித மாற்றங்களுமின்றி தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நெருக்கடிகள் ஏற்படாதிருப்பதற்கு ஏதுவாக அமையுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வழிவகுத்திருப்பதாக அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதி செயலாளர் Robert Kaproth தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோர்ஜியாவுக்கு சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் முழு ஒத்துழைப்பை வழங்குவதையும் உறுதியளித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியா) Yingming Yang உடனும் அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான புதிய 2024-2028 கூட்டாண்மை மற்றும் மூலோபாயத் திட்டம் மற்றும் மேக்ரோ பொருளாதார (பருவினப் பொருளியல்) ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான சீர்திருத்தங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார ரீதியில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான மேலதிக விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை இலங்கைக்கு ஆதரவளிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வலுவான அர்ப்பணிப்பை Yingming Yang மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் தலைமையில் ஜோர்ஜியாவின் திபிலிசியில் நடைபெற்ற சார்க் அபிவிருத்தி நிதியத்தின் நிர்வாக சபையின் ஏழாவது கூட்டம் நடைபெற்றது. இலங்கையின் தலைமைத்துவத்தின் போது சார்க் அபிவிருத்தி நிதியத்தின் நோக்கங்களை அடைதல் மற்றும் உறுப்பு நாடுகள் முன்னோக்கிப் பயணிப்பதற்கு அளித்து வரும் தொடர் ஆதரவுக்கும் அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
சார்க் அபிவிருத்தி நிதியத்தின் நிர்வாக சபையின் அடுத்த தலைவராக பங்களாதேஷ் நிதி அமைச்சர் அபுல் ஹசன் மஹ்மூத் அலியிடம் (Abul Hassan Mahmood Ali )பொறுப்புகளை கையளிக்கும் நிகழ்வும் அங்கு நடைபெற்றது.