மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உரிய தீர்வை வழங்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று (8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் கலந்துரையாடல் தொடர்பான நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டிருந்தமையால் எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்திய இழுவைப்படகுகளால் எமது வாழ்வாதாரம் அடியோடு அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. படியாக எமது கரைக்கு மிக அருகாமையில் (சுமார் 500 மீற்றர் தொலைவில்) வந்து மீன்பிடி நடவடிக்கைய மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் எமது தொழில் வெகுவாகப் பாதிக்கப்படுவதோடு கடல்வளம் அறவே அற்றுப் போய் விடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும். இல்மனைட் மண் அகழ்வினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் இழந்த மீன்பிடி உபகரணங்களுக்கான நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
எமது மாவட்டத்தில் மீனவர்கள் இயற்கை சீற்றங்களினாலும் இந்திய இழுவைப் படகுகளினாலும் தமது மீன்பிடி உபகரணங்களை இழந்து விடுகின்ற பல சந்தர்ப்பங்கள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணமுள்ளன. எனவே எமது மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வை பெற்றுத்தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் குறூப் நிருபர் )