இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்று (08) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது. உப தலைவராக களமிறங்கிய சரித் அசலங்க தனது 3ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். 95 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 101 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய சிம்பாப்வே அணி 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. டில்ஷான் மதுஷங்க அந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்நிலையில் மாலை நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புக்கு மத்தியிலேயே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சுகவீனம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகிய நிலையில் இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ முதல் போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தார். தனது கன்னி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜனித் லயனகேவும் சோபிக்கத் தவறியிருந்தார்.
எனினும் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என்று நம்பப்படுகிறது.