ஹம்பாந்தோட்டை மாவட்டமெங்கும் பெய்துவரும் அடைமழையின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பலமாத காலமாக தொடர்ச்சியாக மழைபெய்து வந்ததோடு மீண்டும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் கதிர்காமம் புனித பிரதேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. அத்தோடு கதிர்காமம் புனித நகருக்கு வருகைதருவோர் மாணிக்க கங்கையினை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் கோரப்படுகின்றனர்.
முருத்தவலை மற்றும் லுனுகம்வெஹெரை ஆகிய நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் தாழ்வான பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கொழும்பு, கதிர்காமம் பிரதான பாதை ஹம்பாந்தோட்டையின் பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு மேலும் பல சிறிய பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளன.
மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருவதினால் மீனிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதோடு மீனவர்களது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளர்களும் தொழில்களை மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
அதேபோல், விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்ட வயல்கள் பல பிரதேசங்களில் வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கின்றன.
இதனால் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்