கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை,வெள்ளம் காரணமாக சுமார் 13,897 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மழை வெள்ளம் காரணமாகவும் இரணைமடுக்குளத்தினது மேலதிக நீர் வெளியேற்றம் காரணமாகவும் இம்முறை பெரும்போக நெற்செய்கையின் பெருமளவான பகுதிகள் அழிவடைந்துள்ளன.
குறிப்பாக கண்டாவளைப் பிரதேசத்தில் மூவாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் அழிவடைந்து இருப்பதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெற்செய்கை அழிவு விவரங்கள் தொடர்பாக தகவல் வெளியிட்ட பிரதி ஆணையாளர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்கள் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டதாகவும் அந்த தகவல்களுக்கு அமைய 13897 ஏக்கர் அழிவடைந்துள்ளதுடன் 4461 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பரந்தன் குறூப் நிருபர்