அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் விரிவான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
20ஆவது தேசிய பாதுகாப்பு நினைவு தினத்தை முன்னிட்டு ‘நிலையான அபிவிருத்தியின் மூலம் அனர்த்ததிற்கு தாக்கு பிடிக்கக் கூடிய சமூகத்தை உருவாக்குதல்’ எனும் தொனிப் பொருளில் அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.ரீ.எம்.அன்ஸார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களின் சட்டவிரோத செயற்பாடுகளினாலேயே இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களை குறைப்பதற்கு அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் முப்படைகள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். மேலும் எதிர்காலங்களில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை எதிர்கொண்டு மக்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.
பல்வேறு வகையான இயற்கை அனர்த்தங்களை உலக நாடுகள் எதிர்நோக்கி வருகின்றன. இதன் காரணமாக மனித உயிர்கள், கட்டுமானங்கள், பொருளாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் என்பவற்றில் பாரிய அழிவை ஏற்படுத்தி இதன் விளைவாக உலக நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன.
(ஒலுவில் விசேட நிருபர்)