அடுத்த ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள 333 வீரர்களில் எட்டு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது. இந்த ஏலம் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர்.
பத்து அணிகள் கொண்ட ஐ.பி.எல் தொடரில் எஞ்சி இருக்கும் 77 இடங்களுக்காகவே இந்த வீரர்கள் ஏலம் இடம்பெறவுள்ளது. இதில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க, குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுஷங்க, சரித் அசலங்க, தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் நுவன் துஷார ஆகிய வீரர்கள் இந்திய நாணயப்படி 50 இலட்சம் ரூபா தொடக்கம் 150 இலட்சம் ரூபா வரையான அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெறுகின்றனர்.
இதில் இந்திய நாணயத்தில் 2 கோடி ரூபா அடிப்படை விலைக்கு இலங்கை முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் போட்டியிட முன்வந்தாலும் அவர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த ஐ.பி.எல் தொடரில் ஆடிய இலங்கையின் வனிந்து ஹசரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் அந்த அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று பானுக்க ராஜபக்ஷவை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்தது.
மறுபுறம் சென்னை சுப்பர் கிங்ஸ் இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவை 2024 தொடருக்கு தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.