பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாவான், காசசேதான் கடவுளடா, அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை, பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை, பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற இத்தகைய சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் ஏராளமாக இருக்கிறன. இதற்கு காரணம் பணம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.
இறைவனின் அருளை தாய்மையின் பாசத்தை உடலின் ஆரோக்கியத்தை தவிர்த்து மற்ற அனைத்தையுமே பணம் இருந்தால் மட்டும் தான் மனிதர்கள் பெறமுடியும். அனுபவிக்க முடியும். ஆனால் உலக நியதி மனிதர்கள் கையில் தேவைக்கு ஏற்ற பணம் எப்போதுமே நிலையில்லாமல் இருந்து வருகிறது. நேற்று இருந்த செல்வம் காலையில் கண்விழித்தால் காணமல் போய்விடுகிறது.
மனிதன் தனது வாழ்நாளில் பெரும் பகுதி பணத்தை தேடியே ஓடுகிறான். அப்படி ஓடினாலும் கூட எத்தனை பெயரால் பணத்தை பெறமுடிகிறது?
வறுமை, பஞ்சம், பசி, பட்டினி என்பவைகள் முன்பை போல நேரடியான கோரதாண்டவம் ஆடவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தனிப்பட்ட அனுபவத்தில் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையிலிருந்து மாற்றி மனிதன் செல்வத்தை அடைவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்தால் நமது முன்னோர்கள் சரியான இறைவழிபாட்டின் மூலமே நிறைவான செல்வத்தை பெறமுடியும் என்கிறார்கள். செல்வத்தின் அதிபதியான திருமகளின் அருளைப் பெற பாடுபடு நிச்சயம் உன் வாழ்வில் சொர்ண மழை பொழியும் என்கிறார்கள். திருமகளை எப்படி வழிபட்டு பூரணமான அருளை சாதாரண மனிதர்கள் பெற இயலும் ?
பிள்ளைகள் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, வேலை பிரச்சினை, சமூக பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் சாதாரண மக்கள் தங்களது நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கி மன ஒருநிலைப்பாட்டுடன் முறைப்படியான மந்திரங்களை உருவேற்றி பூஜைகள் செய்து மகாலஷ்மியின் அருள்பிரசாதத்தை பெறமுடியும் சாதாரண மனிதர்களால் அது இயலாது என்பதனால் தான் அருளாளர்களையும் ஞானிகளையும் துறவு வாழ்க்கை மேற்கொண்ட மகாபுருஷர்களையும் இறைவன் நமக்கு காட்டி தந்திருக்கிறான்.
மார்கழி மாதம் என்பது தேவர்களின் காலை பொழுது இந்த மாதத்தின் தேவர்களின் வாழ்க்கை மட்டும் விடிவை நோக்கி போவதில்லை. மனிதர்களின் வாழ்க்கையும் வாக்கும் கூட புதிய விடியலை நோக்கி நகர்ந்து செல்லும். மார்கழி மாதத்தின் செய்யப்படுகிற பூஜைகள், பரிகாரங்கள், தியானங்கள், தவங்கள் எல்லாமே இறைவனின் அருளால் வெற்றிவாகையை சூடிதருவதனால் தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்கிறான்.