முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் சில தினங்களுக்கு முன்னர் ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது ஒலுவில் வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் அங்குள்ள உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் இவ்வைத்தியசாலையினால் ஒலுவில்வாழ் மக்கள் பெற்றுக் கொள்ளும் சேவைகளின் தரத்தினையும் பைசல் காசிம் எம்.பி இதன்போது கேட்டறிந்து கொண்டார். இங்குள்ள பொதுமக்கள் சேவை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதனை கவனத்திற் கொண்ட அவர் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இவ்வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள், அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.
குறித்த விடயங்களுக்கு உரிய தீர்வை குறுகிய தினங்களுக்குள் வழங்குவதாக அதிகாரிகள் கூறியதற்கமைவாக அவ்விடயங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், சேவை வழங்கும் வைத்தியர்கள், ஊழியர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில் மிகப் பழைமையான வரலாறு கொண்ட பெரிய பள்ளிவாசலுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். பள்ளிவாசலின் சுற்றுமதில் அமைத்தல், அதற்கான நிதி திரட்டும் விடயங்கள் தொடர்பில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெளிவுபடுத்தியிருந்தனர்.
இவ்விடயத்திற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பினையும் வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். பின்னர் நிருவாக சபையினரால் சுற்றுமதில் நிர்மாணிப்புக்கு நிதி திரட்டல் தொடர்பான ஆவணக் கடிதம் கையளிக்கப்பட்டது.
அவர் இராஜாங்க அமைச்சராகப் பதவிவகித்த காலத்தில் இப்பிரதேசத்திற்கு ஆற்றிய பணிகள் தொடர்பில் அங்குள்ள பெரியோர்கள், இளைஞர்கள் பலரும் சிலாகித்து பேசியிருந்தனர். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பைசால் காஷிம் எம்.பி, தன்னுடைய அரசியல் வாழ்வில் ஒருபோதும் அரசியலை மையப்படுத்தி சேவைகளை செய்யவில்லை என்றும் மக்களை, அவர்களின் தேவைகளை மையப்படுத்தியே பணி செய்துள்ளதாகவும், இதனை இப்பிரதேச மக்கள் நன்கறிவர் என்றும் குறிப்பிட்டார்.
றிசாத் ஏ. காதர்…?
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)