இ ந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்கின்ற அத்தனை தேர்தல் கருத்துக் கணிப்புகளையும் தவிடிபொடியாக்கி ஸோரம் மக்கள் இயக்கம் (Zoram People’s Movement ZPM) 26 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள் மாத்திரமே.
மிசோரம் மாநிலத்தில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியாக மிசோ தேசிய முன்னணி (Mizo National Front – MNF) ஆட்சி முதல்வர் ஜோரம்தங்கா தலைமையில் நடைபெற்றது.
மிசோரம் மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பான அனைத்து கருத்துக் கணிப்புகளுமே தொங்கு சட்டசபைதான் அமையும். ஆளும் எம்.என்.எஃப் மற்றும் ேஸாரம் மக்கள் இயக்கம் ஆகியவை அதிகமான இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் அல்லது பா.ஜ.கவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியைத்தான் அமைக்கும் என அடித்துக் கூறின. ஆனால் தேர்தல் களத்தில் பா.ஜ.கவிடம் இருந்து ஆளும் எம்.என்.எஃப் விலகியே நின்றது.
மிசோரம் மாநில மக்களும் மணிப்பூரின் குக்கி இன பழங்குடிகளும் தொப்புள் கொடி உறவானவர்கள். மணிப்பூரில் குக்கி இன மக்கள், மைத்தேயி மக்களால் ஒடுக்கப்பட்டு படுகொலைக்குள்ளான போது மத்திய பா.ஜ.க அரசு கண்டு கொள்ளவும் இல்லை,- மணிப்பூர் வன்முறையை ஒடுக்கவும் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.
இந்தக் கோபம் மிசோரம் மாநில தேர்தல் களத்தில் எதிரொலித்துள்ளது. ஸோரம் மக்கள் இயக்கம் புதிய ஆட்சியை அமைப்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்தான் நேற்றுப் பிற்பகல் முன்னிலை வகித்தது. பா.ஜ.க 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.
இதேவேளை மொத்தம் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மூன்று மாநிலங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக அக்கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலேயே பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.