Tuesday, April 30, 2024
Home » ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் வனிந்துவுடன் மத்தியூஸ், ஷானக்க, பானுக்கவும் பதிவு

ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் வனிந்துவுடன் மத்தியூஸ், ஷானக்க, பானுக்கவும் பதிவு

by damith
December 4, 2023 6:00 am 0 comment

டுபாயில் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 1,166 வீரர்களில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்திய நாணயப்படி 2 கோடி ரூபா அடிப்படை விலைக்கான 25 வீரர்களில் ஒருவராக மத்தியூஸ் இடம்பெற்றிருப்பதோடு, தனது முந்தைய அணியான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹசரங்க இந்திய நாணயப்படி 1.5 கோடி ரூபா அடிப்படை விலையில் ஏலத்தில் குதித்துள்ளார். இந்த அடிப்படை விலையில் ஹசரங்கவுடன் மேலும் மேலும் 19 வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிய நிலையில் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் பானுக்க ராஜபக்ஷ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தசுன் ஷானக்க ஆகியோரும் எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த உலகக் கிண்ண தொடரில் சோபித்த மிச்சல் ஸ்டார்ச், பெட் கம்மின்ஸ், ட்ரவிஸ் ஹெட், டரில் மிச்சல் மற்றும் ரச்சின் ரவிந்திரா ஆகிய வீரர்களும் பத்து அணிகள் ஆடும் ஐ.பி.எல் தொடரில் இணையும் எதிர்பார்ப்புடன் வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொடரில் இடம்பெறுவதில் சந்தேகம் இருந்து வந்த ஜோஷ் ஹேசல்வுட்டும் ஏலத்திற்கு தனது பெயரை இணைத்துள்ளார்.

வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றிருக்கும் 1,168 பேரில் 830 வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு 336 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இதில் சர்வதேச போட்டிகளில் ஆடிய 212 வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாத 909 வீரர்கள் மற்றும் இணை நாடுகளைச் சேர்ந்த 45 வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

பதிவு செய்யப்பட்ட வீரர்களில் தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, நமீபியா, நேபாளம், நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அமெரிக்க வீரர்கள் அடங்குகின்றனர்.

ஐ.பி.எல் இல் ஆடிய இலங்கை வீரர்களான மதீஷ பத்திரண மற்றும் மஹீஷ் தீக்ஷன அகிய இரு வீரர்கள் மாத்திரம் அவர்கள் ஆடும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டனர். கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி சம்பியன் கிண்ணத்தை வெல்ல இந்த இரு வீரர்களும் பந்துவீச்சில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்படாத மேலதி வீரர்கள் தொடர்பில் அணிகள் பரிந்துரைக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிக்கை விடுத்துள்ளது. பரிந்துரைக்கப்படும் வீரர்கள் தகுதி மற்றும் ஆர்வம் இருந்தால் நேரடியாக வீரர்கள் ஏலத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடருக்கான அணிகளில் இணைக்கப்பட வேண்டிய 77 இடங்கள் எஞ்சி இருப்பதோடு இதில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT