இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவரும், சகலதுறை வீரருமான பென் ஸ்டோக்ஸ் 2024 ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
பணிச்சுமை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் முடிவுக்கு உறுதுணையாக இருப்பதாக சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2023 ஐ.பி.எல் போட்டிக்கு முன் சென்னை சுப்பர் கிங்ஸால் இந்திய நாணயப்படி ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டோக்ஸ் காயம் காரணமாக கடந்த ஐ.பி.எல் தொடரில் 2 ஆட்டங்களில் ஆடினார்.
இதைத் தொடர்ந்து, ஆஷஸில் முழு நேர துடுப்பாட்ட வீரராக விளையாடிய ஸ்டோக்ஸ், ஓய்விலிருந்து வந்து ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடினார். உலகக் கிண்ணத்தின் பின் முழங்காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள ஸ்டோக்ஸ் முடிவெடுத்தார். இந்தக் காயம் காரணமாக 18 மாதங்களாக அவர் அவதிக்குள்ளாகி வந்தார். இதன் காரணமாகவே முழு நேர துடுப்பாட்ட வீரராக அவர் செயல்பட ஆரம்பித்தார்.
அடுத்தாண்டு இந்தியாவுக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாடவுள்ளது. இதற்கு முன்னதாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு முழு உடற்தகுதியை அடைய வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.