2024 ஆம் ஆண்டுக்கான அநுராதபுரம் மாவட்ட போக்குவரத்து மற்றும் வீதித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் அநுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பிரதேசத்தில் உள்ள வீதிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ரயில்வே திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபை, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களினால் 2024 ஆம் ஆண்டு
செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டத்தையும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்து, அதன் அனுமதியுடன் செயல்படுத்துவது மிகவும் நடைமுறை சாத்தியம் என வலியுறுத்தப்பட்டது.
அங்கு பேசிய அமைச்சர் பந்துல குணவர்த்தன
“தற்போதைய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியின் போது, செலவினங்களைக் கட்டுப்படுத்துவது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. 75 ஆண்டுகால வரலாற்றில், கடந்த ஆண்டு மட்டுமே பொருளாதாரம் எதிர்மறையான 08 என்னும் வீதத்தை பதிவுசெய்தது. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் சுருங்கியுள்ளன. பாதைகள் மற்றும் ஏனைய அபிவிருத்திச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
ஒரு நாடாக அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனாலேயே, கடந்த மூன்று வருடங்களாக கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் எந்த விதமான பலன்தரும் அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கத்தால் முன்பு செய்தது போல் செலவினங்களை தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது.
அரச வரி வருமானத்தில் இருந்து அரசு ஊழியர் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்திய பிறகு, பெற்ற கடனுக்கான கடன் வட்டி செலுத்துதல் உட்பட மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கடனை மறுசீரமைக்கும் வரை, எந்தவொரு சர்வதேச நிறுவனத்திடமிருந்தும் கடன் பெற முடியாது.
இந்தக் காரணங்களால், வீதிகள்;, பாலங்கள், இதர கட்டுமானங்கள் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், பாதியில் முடிக்கப்பட்ட திட்டங்களாக இருந்தாலும், அவற்றை முடிக்க வெளிநாட்டு உதவி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து கடன் பெறமுடியாது.
இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைத்த பின்னரே நாம் முன்வைக்கும் திட்டங்களை எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்த முடியும்.