அம்பாறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மக்களுக்கான அடிப்படை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு மங்களகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஏ.சீ. சத்தரசிங்க தலைமையில் அண்மையில் மங்களகம பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச காதி நீதிபதியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பாறூக் சாஹிப் கலந்து கொண்டார்.
அடிப்படை சட்டங்கள், பொலிஸாரின் கடமை பொறுப்புக்கள், பொது மக்கள் நடந்துக் கொள்ள வேண்டிய விதங்கள், வன பாதுகாப்பு, மது வரி மற்றும் பொலிஸ் திணைக்கள நடவடிக்கைகள், திணைக்கள சட்டங்களை மீறும் போது ஏற்படும் விளைவுகள், மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதில் பொது மக்களின் பங்கு மற்றும் அதிகாரிகளின் கடமைகள் பற்றிய விழிப்புணர்வை சட்டத்தரணி பாறூக் சாஹிப் அங்கு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் சமுதாய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வன பரிபாலன அதிகாரி, விவசாய அபிவிருத்தி சங்க உறுப்பினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)