இஸ்ரேலுக்கான தூதுவரை திரும்ப அழைத்திருக்கும் பஹ்ரைன், அதனுடனான பொருளாதார உறவுகளையும் இடைநிறுத்தியுள்ளது.
பஹ்ரைன் பாராளுமன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இஸ்ரேலிய தூதுவர் ஈடான் நேஹ் மனாமாவில் இருந்து வெளியேறியதாகவும் பஹ்ரைனிய தூதுவர் காலித் யூசிப் அல் ஜலஹ்மா இஸ்ரேலில் இருந்து திரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சகோதர பலஸ்தீனர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் பலஸ்தீன விடயத்தில் பஹ்ரைனின் வரலாற்று ரீதியான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை உறுதி செய்வதாக இது உள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜோர்தான், சிலி மற்றும் கொலம்பிய நாடுகள் இஸ்ரேலுக்கான தனது தூதுவரை திரும்ப அழைத்ததோடு பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய நாடுகளில் பஹ்ரைனும் ஒன்றாகும். இதில் சூடான், மொரோக்கோ மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை மற்ற நாடுகளாகும்.