சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக தேவை ஏற்படும் பட்சத்தில் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் செயற்படுவார்களென, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்த போது,
“யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால், பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் படையினர், பொலிஸார் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவொன்றை எடுத்து, அதை செயற்படுத்தி வரும் அதேவளை, பொதுமக்களுக்கு இலகுவாகவும் நியாயமான விலையிலும் மணல் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
தற்போது சட்டவிரோத மணல் அகழ்வை பொலிஸாரே கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேவை ஏற்படும் பட்சத்தில் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் செயற்பாடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
யாழ். விசேட நிருபர்