ஷி யான் – 6 (Shi Yan 6) சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஷி யான் – சீன சமுத்திரவியல் ஆய்வு கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் நாளை மறுதினம் (08) வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.இந்த வகையில் எரிபொருள் உள்ளிட்ட கப்பலுக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கே இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே இக்கப்பல் இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தது.
நாரா நிறுவனத்தோடு இணைந்து ஒருவார காலத்துக்கு மாத்திரம் இந்து சமுத்திர நீர் தொடர்பில் விசேட ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருப்பதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளவுள்ளது.
2010 முதல் இந்த ஆய்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலையடுத்து இந்நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
லோரன்ஸ் செல்வநாயகம்