தென்மேற்கு சிரியாவில் உள்ள இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் எட்டு படையினர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்திருப்பதாக சிரிய அரச செய்தி நிறுவனமான சானா குறிப்பிட்டுள்ளது.
தென் மேற்கு நகரான டராவுக்கு அருகில் உள்ள பல இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவத் தரப்பை மேற்கோள்காட்டி சானா குறிப்பிட்டுள்ளது. இதனால் பொருள் சேதமும் ஏற்பட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி இரு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரிய இராணுவ உட்கட்டமைப்பு மற்றும் மோட்டார் ஏவு நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
சிரியாவில் இருந்து வீசப்பட்ட இரு ரொக்கெட் குண்டுகள் கடந்த செவ்வாய் இரவு இஸ்ரேலின் திறந்தவெளி பகுதியில் விழுந்ததாகவும் அதற்கு பதிலடியாக பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்தே அது வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதலுக்கு மத்தியில் இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபனானில் அண்மைய தினங்களில் அது ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.