Saturday, April 27, 2024
Home » இறையாட்சிக்குள் பிரவேசிக்கும் தகைமை இயேசுவின் திருமண விருந்து உவ​மை

இறையாட்சிக்குள் பிரவேசிக்கும் தகைமை இயேசுவின் திருமண விருந்து உவ​மை

by sachintha
October 17, 2023 12:59 pm 0 comment

உணவு என்பது உறவின் அடையாளமாகவும் காணப்படுகிறது. உறவின் அடையாளமாகப் பரிமாறப்படும் உணவை நாம் விருந்து என்கிறோம்.

இந்த ஞாயிறு இறைவார்த்தை வழிபாடு விருந்துக்கான அழைப்பு மற்றும் பதிலிறுப்பை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. நாம் பலரை அழைத்து விருந்து படைக்கிறோம். மற்றவர்களின் அழைப்புக்கு பதிலிறுப்பு செய்கின்றோம்.

அன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் நிறைவுகாலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு வைக்கவிருக்கின்ற விருந்து பற்றி முன்னுரைக்கிறார் இறைவாக்கினர் ஏசாயா. (ஏசாயா 25:6-10),

நிறைவுகாலம் என்பது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வருகிற நிகழ்வைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

ஆண்டவராகிய கடவுளின் பெயர் ‘படைகளின் ஆண்டவர்’ என வழங்கப்பட்டுள்ளது. சீயோன் மலையில் படைகளின் ஆண்டவர் விருந்தினை ஏற்பாடு செய்கிறார். இந்த விருந்தின் மூன்று பண்புகளாக இறைவாக்கினர் குறிப்பிடுபவை:

(அ) விருந்துக்கான அழைப்பு பொதுவானது – இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்லாமல் மக்களினங்கள் அனைவரையும் ஆண்டவராகிய கடவுள் அழைக்கிறார். (ஆ) விருந்து சுவைமிக்கது – பண்டங்களும், பழரசப் பானமும் இறைச்சிகளும் வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம். (இ) விருந்து நிறைந்து பெருகி வழிகிறது வருகிற அனைவரும் உண்ணும் அளவுக்கு அபரிமிதமாக இருக்கிறது.

இந்த விருந்தின் வழியாக துன்பம், சாவு, கண்ணீர், நிந்தை என்னும் நான்கு எதிர்மறையான நிலைகளைக் களைகிறார் கடவுள்.இவற்றையெல்லாம் காண்கிற மக்கள், ‘இவரே நம் கடவுள். இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்’ என்று பாடுவார்கள்.

ஆண்டவராகிய கடவுள் இந்த உறவின் வழியாக இஸ்ரயேல் மக்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் மீட்பரை மீண்டும் கண்டுகொள்கிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில் திருமண விருந்து உவ​மையை வாசிக்கின்றோம். இது லூக்கா நற்செய்தியிலும் இந்த உவமை காணப்படுகிறது. தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து இயேசு இந்த உவமையை உரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார்.

அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்துகிறார். யூத சமூகத்தில் திருமண நிகழ்வு என்பது மிக முக்கியமான ஒன்று. ஏழு நாட்கள் முதல் முப்பது நாட்கள் வரை நடக்கக் கூடியது அந்த நிகழ்வு. இங்கே இளவரசனுக்குத் திருமணம் நடக்கிறது. விருந்துக்கான அழைப்பு முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கும் குழுவினர்களுக்கும் இரண்டாவதாக ஏனையோருக்கும் வழங்கப்படுகிறது.

முதலில் அழைக்கப்பட்டவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி அழைப்பை நிராகரிக்கிறார்கள். இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்றாலும் அவர்களில் ஒருவர் திருமண உடை அணியாமல் வருவதால் நிராகரிக்கப்படுகிறார். ‘அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்’ என்னும் வாக்கியத்தோடு உவமை நிறைவு பெறுகிறது.

முதலில் அழைக்கப்பட்டவர்கள் நான்கு நிலைகளில் பதிலிறுப்பு செய்கிறார்கள்: (அ) விருப்பம் இல்லாமல் இருந்தார்கள் (மத் 22:3). (ஆ) அழைப்பைப் பொருட்படுத்தவில்லை (22:5). (இ) வேறு முதன்மைகளைக் கொண்டிருந்தார்கள் – வயலுக்கும் கடைக்கும் செல்தல் (22:5). (ஈ) பணியாளர்களை இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள் (22:6). இந்த நான்கு பதிலிறுப்புகளும் எதிர்மறையாக இருக்கின்றன.

இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நேர்முகமாகப் பதிலிறுப்பு செய்து விருந்தில் பங்கேற்க வந்திருந்தாலும், வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடையின்றி வருகிறார். திருமண ஆடை என்பது விருந்துக்கான அழைப்பின்போது வழங்கப்படுகிற ஆடை. விருந்துக்குச் செல்பவர்கள் அவ்வாறு வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டே செல்வர். ஆடையை அணிய மறுப்பதன் வழியாக ஒருவகையில் இந்த நபரும் எதிர்மறையாகவே பதிலிறுப்பு செய்கிறார்.

உவமையின் பொருளைப் பார்க்கும்போது, அரசர் என்பவர் வானகத் தந்தை. மகன் இயேசு கிறிஸ்து, திருமண விருந்து இறையாட்சி. பணியாளர்கள் இறைவாக்கினர்கள். முதலில் அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள். இரண்டாவது அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக அழைக்கப்பட்ட புறவினத்தார்கள் அனைவரும் திருமண விருந்துக்குள் நுழையும் தகுதி பெற்றிருந்தாலும் விருந்தில் தொடர்வது என்பது ஒவ்வொருவரும் தம்மையே தகுதியாக்கிக்கொள்வதைப் பொறுத்தே அமைகிறது.

முதல் வாசகத்தில் நாம் காணும் விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பைப் பெறுகிறது. இரண்டாம் வாசகத்திலோ விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுகிறது.

விருந்துக்கான அழைப்பு நிராகரிக்கப்படுவதற்கான காரணம் அரசரின் மேன்மையையும் வல்லமையையும் மக்கள் அறியாததே. இதை வெறும் விருந்து என்று பார்த்தார்களே தவிர, அரசரோடு உறவாடக் கூடிய வாய்ப்பு என்று அவர்கள் பார்க்கவில்லை. மேலும், மேன்மையான விருந்தைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக தாழ்மையான தங்களுடைய முதன்மைகளைத் தேர்ந்துகொண்டார்கள்.

இந்த இரண்டு விருந்து அழைப்புகளும் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

முதலில் வாழ்க்கை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கான அழைப்பை ஆண்டவராகிய கடவுள் நம் அனைவருக்கும் வழங்குகிறார். அவர்தாமே நமக்கு விருந்து பரிமாறுகிறார். அவர் நமக்கு விருந்து அளித்தாலன்றி நாம் பசியாற முடியாது. ஆனால், பல நேரங்களில் நம் காலிக் கோப்பைகளைத் தூக்கிக்கொண்டு மற்ற காலிக் கோப்பைகளைத் தேடிச் செல்கிறோம். காலிக் கோப்பைகள் ஒருபோதும் மற்ற காலிக் கோப்பைகளை நிரப்ப முயலாது என்பதை அறிந்துகொள்வோம்.

இரண்டாவது அருளடையாளங்கள், குறிப்பாக, நற்கருணை என்பது ஒரு திருமண விருந்து. இந்த விருந்துக்கு நாம் எல்லாரும் அழைப்பு பெற்றிருந்தாலும் திருமண ஆடை அணியாதவர் விருந்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். திருமண ஆடை என்பது நாம் கொள்ள வேண்டிய தயார்நிலை. விருப்பம் மட்டும் போதாது. தயார்நிலையும் வேண்டும்.

மூன்றாவது, திருமண விருந்தின் நோக்கம் கடவுளோடு உள்ள உறவு. ‘இவருக்காகவே நாங்கள் காத்திருந்தோம்’ என்று படைகளின் ஆண்டவரைத் தேடி ஓடுகிறார்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளோடு நாம் கொள்ள வேண்டிய உறவு அவரோடு நாம் அருந்தும் உணவின் வழியாகவே நிறைவு பெறுகிறது.

உணவும் விருந்தும் விவிலியத்தில் முதன்மையான கருத்துருகளாகத் திகழ்கின்றன. நம் முதற்பெற்றோரின் பாவம் விலக்கப்பட்ட கனியை உண்டதில்தான் தொடங்குகிறது.

இயேசு பல விருந்துகளில் பங்கேற்கிறார். விருந்து பற்றிய எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். காணாமற்போன மகன் எடுத்துக்காட்டில் (லூக் 15), இளைய மகன் திரும்பிவந்தபோது அனைவருக்கும் விருந்து படைக்கிறார் தந்தை. விருந்தில் கலந்துகொள்ள மணம் இல்லாமல் வெளியே நிற்கிறான் மூத்தமகன். தந்தையின் அழைப்பு அவன் காதுகளில் விழுகிறது. ஆனால், அவனோ மௌனமாக நகர்கிறான்.விருந்துக்கான அழைப்பு நேர்முகமான பதிலிறுப்பு பெறாவிடில் உறவும் முறிந்துவிடுகிறது.

அருட்பணி யேசு கருணாநிதி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT