Sunday, April 28, 2024
Home » ஏழை, பணக்காரர் அனைவரினதும் பயணத்துக்கான நண்பன் லுமாலா

ஏழை, பணக்காரர் அனைவரினதும் பயணத்துக்கான நண்பன் லுமாலா

இலங்கையின் பாரிய சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கடந்து வந்த கரடுமுரடான பாதை!

by damith
October 9, 2023 6:00 am 0 comment

ஊக்கத்துடன் முன்னேறுபவர்களின் வாழ்க்கையின் ஆரம்பம் கசப்பானது. ஜப்பானிய மொழியில் ‘சக்தி’ என்னும் அர்த்தத்தைத் தருகின்ற ‘லுமாலா’ என்னும் பெயரில் இந்நாட்டில் பிரபல்யமான சைக்கிள் நிறுவனம் இயங்கி வருகின்றது.

அந்நிறுவனம் வார்த்தைகளால் கூற முடியாத அளவு அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு முன்னணிக்கு வந்துள்ளது. லுமாலா என்னும் பெயர் இந்நாட்டின் சைக்கிள் துறையில் முதலிடத்தை அடைய எடுத்த முயற்சியானது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.

லுமாலா சைக்கிள் தொழிற்சாலை இன்று 3 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள பாரிய கட்டட வளாகமாகும். 38 வருட காலமாக மூன்று பரம்பரையாக இலங்கையின் சைக்கிள் உற்பத்தி முதன்மை நிறுவனம் என்பது இரகசியமான விடயமல்ல. இதுவரையில் பயணித்த பாதையின் சிரமமான முயற்சியின் பலனை இந்நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளமைக்கு பல சாட்சிகள் உள்ளன.

முகாமைத்துவப்பணிப்பாளர் ஆசிம் மிப்லால்

முகாமைத்துவப் பணிப்பாளர் ஆசிம் மிப்லால்

பணிப்பாளர், தலைமை நிறைவேற்று அதிகாரி தாரிக் மிப்லால்

பணிப்பாளர், தலைமை நிறைவேற்று அதிகாரி தாரிக் மிப்லால்

சிற்றி சைக்கிள் ஸ்டோர்ஸ் (City cycle Stores) என்னும் பெயரில் பாணந்துறை, சரிக்காலமுல்ல, ஹேனாமுல்ல, காலி வீதி இலக்கம் 119 என்னும் இடத்திலேயே இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆர். எம் நஜிமுதீன் என்னும் வர்த்தகரால் 1953 இல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வர்த்தக நிலையமாக இது ஆரம்பிக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு லுமாலா வர்த்தகப் பெயரின் கீழ் ஜப்பானின் பிரபல சைக்கிள் உற்பத்தி நிறுவன ஒப்பந்தத்துடன் அதே வர்த்தகப் பெயருடன் இந்நாட்டு வர்த்தக சந்தைக்கு லுமாலா சைக்கிள்கள் இறக்குமதி செய்து விற்கப்பட்டன. பின்னர் ஜப்பானின் லுமாலா சைக்கிள் உற்பத்தித் தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர், 1985 ஆம் ஆண்டு அந்த தொழிற்சாலையின் அனைத்து இயந்திர உபகரணங்களோடு ‘லுமாலா’ என்னும் பெயரையும் தற்போதைய தலைவர் எம். எம். மிஃப்லால் விலைக்கு வாங்கினார்.

லுமாலா என்னும் ஜப்பான் வர்த்தக நாமத்தின் கீழ் ஒரு கட்டடத்தில் மூன்று ஊழியர்களுடன் இந்த வர்த்தகம் தற்போதைய தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வர்த்தகம் இலங்கையால் கையகப்படுத்தப்பட்ட பின்னர் அதனை தற்போதைய நிலைமைக்கு கொண்டு வந்த ஆரம்ப கர்த்தா இவராவார்.

டயர் தயாரிப்புப் பிரிவு

டயர் தயாரிப்புப் பிரிவு

அதன் பின்னர் மிகவும் குறுகிய காலத்தில் 2010 அளவில் தேசிய வர்த்தக சந்தையை ஆக்கிரமித்து வெளிநாட்டு சந்தையையும் வெற்றி கொள்ள முடிந்தது. அவ்வேளையில் 1500 ஊழியர்கள் பணிபுரிந்ததோடு நாளொன்றுக்கு 2000 சைக்கிள்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டன. அதன் பின்னர் ஒரு தசாப்த காலத்திலேயே இலங்கையின் ஏற்றுமதித்துறையில் முக்கிய இடத்தை அடைந்ததோடு, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தை வகித்தனர். தற்போது லுமாலா குடும்பத்தின் இன்னுமொரு உற்பத்தியாக ‘லைக்கன்’ என்னும் பெயரில் மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட சைக்கிள் உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தேசிய பொருளாதாரத்துக்கு அளிக்கும் பங்களிப்பை நாம் கௌரவிக்க வேண்டும்.

லுமாலா நிறுவனத்தால் 1997 இல் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு சைக்கிள் ஏற்றுமதியை ஆரம்பித்து 1999 இல் ஐரோப்பிய வர்த்தக சந்தையையும் வெற்றிகொண்டது. 2005 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்கும் பின்னர் பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளுக்கும் லுமாலா சைக்கிள்களை ஏற்றுமதி செய்கிறது.

சைக்கிள் சட்டம் தயாரித்தல்

சைக்கிள் சட்டம் தயாரித்தல்

நாட்டில் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் மற்றும் வரிவிதிப்பால் சைக்கிள் உற்பத்தி செய்வதில் பெரும் செலவும் ஏற்பட்டன. நாளாந்தம் 2000 சைக்கிள் வரை உற்பத்தி செய்யக்கூடிய லுமாலா தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம் தேசிய பொருளாதாரம் மேம்படும் என்பதோடு, இந்த பாரிய வர்த்தகம் எமது ஏற்றுமதி வருமானத்துக்கு பெரும் பங்களிப்பு வழங்கும் என்பதும் உறுதி.

தேசிய உற்பத்தியான லுமாலா தொடர்பாக இதற்கு முன்னர் அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்திருந்தால் தங்களுடைய உற்பத்தியின் கொள்ளளவை இதைவிட அதிகரித்திருக்கலாம் என லுமாலா நிறுவனத்தின் பணிப்பாளர் தலைமை நிறைவேற்று அதிகாரி தாரிக் மிப்லால் தெரிவித்தார். தற்போது போட்டி நிறைந்த வர்த்தகச் சந்தையில் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்களை விநியோகிப்பது மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்து சைக்கிள்களை தயாரிப்பதும் லுமாலா போன்ற சைக்கிள் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தரத்தில் உயர்வான சைக்கிள்களை உற்பத்தி செய்வதாயின், இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்களை விட அதிக அளவு செலவிட வேண்டி உள்ளது.

லுமாலா சைக்கிள்

லுமாலா சைக்கிள்

அதனால் தேசிய கைத்தொழிலான அவர்களின் சைக்கிள் கைத்தொழில் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கழிவு மரத்தூள் மற்றும் அதற்கான வெப்பத்தைப் பெற நீரையும் மாற்றுவழிகளாக பயன்படுத்துகிறது.

புதைபடிவ எரிபொருளுக்குப் பதிலாக மின்சாரத்தைப் பயன்படுத்தி குறைந்த செலவின் கீழ் போக்குவரத்து வசதியை வழங்கக் கூடியவாறு மின்சார சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது காணப்படும் நிதிப்பிரச்சினையின் மத்தியில் பயனுள்ள மாற்றுத் திட்டமாக இதனை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மற்றும் வெளிநாட்டு வர்த்தக சந்தையை நோக்கமாகக் கொண்டு வருடத்திற்கு 5 இலட்சம் யூனிட்டுக்கும் அதிகமான சைக்கிள்களை உற்பத்தி செய்யும் மின்சார சைக்கிள்கள் (e-bike) லைக்கன் என்னும் வர்த்தகப் பெயரின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சைக்கிள்களுக்காக பெருமளவு வெளிநாட்டு சந்தை கேள்வி உள்ளதாக முகாமைத்துவம் குறிப்பிடுகின்றது. இந்த சைக்கிள்களுக்கு தேசிய சந்தையை விரிவுபடுத்துவதற்காக அரச நிறுவன ஊழியர்களுக்கு மற்றும் வேறு சேவைகளை வழங்குபவர்களுக்கு ஏதேனும் சலுகை முறையின் கீழ் இந்த சைக்கிள்களை அறிமுகம் செய்வதற்கு அரசு தலையிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனத்தின் பல பிரிவுகளின் பங்களிப்புடன் முற்றிலுமாக உள்ளூரில் இந்த சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாவுக்கும் குறைந்தளவே செலவாகிறது. ஒரு தடவை மின்னேற்றினால் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய லைக்கன் மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட பலமாதிரியான சைக்கிள்கள் லுமாலா நிறுவனத்தால் எதிர்காலத்தில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

வர்ணம் பூசுதல்

வர்ணம் பூசுதல்

இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் சாதாரண மின்சார சைக்கிள்கள், உல்லாசப் பயணிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இரட்டை ஆசனங்கள் கொண்ட மின்சார சைக்கிள்கள், கழிவுப் பொருட்களான பிளாஸ்டிக் போத்தல் உள்ளிட்ட இலகு கழிவுகளை சேகரிக்க விசேட மின்சார சைக்கிள்கள், மின்சாரத்தால் செயல்படுத்தப்படும் சக்கர நாற்காலிகள், மக்கள் போக்குவரத்துக்கான ஆசனங்களுடன் கூடிய மின்சார சைக்கிள்கள், ஐஸ்கிரீம் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய நாடு பூராவும் பிரபலமான உணவு உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பவர்களுக்கான மின்சார சைக்கிள்கள், நடமாடும் விற்பனை நடவடிக்கைகளுக்காக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட பல மாதிரிகளை அறிமுகப்படுத்தி உள்ளதோடு கேள்விக்கு அமைய பாரியளவில் அவற்றை உற்பத்தி செய்யக்கூடிய திறமை நிறுவனத்திடம் உள்ளது.

இந்த சைக்கிள்களை அரசு விசேட கேள்வியின் கீழ் அரசு அதிகாரிகள், பிரதேச ஊடகவியலாளர்கள், நடமாடும் வர்த்தகர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தால் அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவியாக இருக்கும். இந்நாட்டில் போன்று ஐரோப்பா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இதற்கு பெரும் கிராக்கி உள்ளதாக நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் ரஞ்சித் சிறிவர்தன தெரிவித்தார்.

இந்நிறுவனத்தில் 1500 இற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி உள்ளிட்ட வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்நாட்டில் போட்டியாக குறைந்த விலையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலாகும். லுமாலா தொழிற்சாலையில் நூற்றுக்கு நூறு வீதம் உள்ளூர் உற்பத்தி என்பதால் செலவு அதிகம். விற்பனை செய்யும் போது வரி அறவிடுவதால் இந்நிறுவனத்தை நடத்த பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது என பொதுமுகாமையாளர் தெரிவித்தார்

சில பிரிவுகளுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வது இலாபம் என்பதால் தற்போது இங்கு பணிபுரியர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்க வேண்டிய துயரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிறுவனத்தின் உற்பத்தி அளவு அதிகரித்த மட்டத்தில் காணப்பட்டால் வர்த்தக சந்தைக்கு வழங்கும் போது இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்களை விட அதிக செலவை அவர்கள் செய்ய வேண்டியுள்ளது.

நிறுவனத்தின் வர்த்தக முகாமையாளர் நிலந்த சட்டன் ஆராச்சி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் “இவ்வாறான தேசிய உற்பத்திகள் தொடர்பில் மக்களுக்கு விரிவான அறிவுறுத்தல் அத்தியாவசியமாகும். கைத்தொழிலாக இவ்வாறான நிறுவனம் மேற்கொள்ளும் சேவை தற்போது உள்ளதைவிட அதிகமாக சமூகத்தில் பரப்பப்பட வேண்டும். பாரம்பரிய சைக்கிள்களுக்கு பதிலாக பலவகையான அதாவது சிறு பிள்ளைகளுக்கு, பல துறைகளைச் சேர்ந்த நடமாடும் விற்பனையாளர்களுக்கு இலகுவான முறையிலான சைக்கிள்கள் விஷேடமாக லைக்கன் என்னும் பெயரில் மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட பல உற்பத்திகள் தற்போது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

விசேடமாக மின்சார சைக்கிள்களை பயன்படுத்துவதன் மூலம் உடல் ரீதியான நன்மையும், பாரிய சேமிப்பும் கிடைக்கும். நாள்தோறும் பயன்படுத்துபவருக்கு ஒரு மாதத்திற்கு 8000 ரூபா வரை எரிபொருள் சேமிப்பு இதன் மூலம் கிடைக்கும்,

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் லுமாலா சைக்கிள்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்களை விட லுமாலா சைக்கிள் உயர்தரத்தில் காணப்படுகின்றன. லுமாலா என்பது நூற்றுக்கு நூறு வீதம் இலங்கையிலேயே தயாரிக்கப்படும் சைக்கிளாகும் இலங்கையில் தயாரிப்பது மாத்திரம் அல்ல ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த வர்த்தகம் வெளிநாட்டிலிருந்து சைக்கிள்களை இறக்குமதி செய்து விற்பதன் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. லுமாலா உற்பத்தி ஜப்பானில் நிறுத்தப்பட்டது. அதனையே விலைக்கு வாங்கி இங்கு அந்நிறுவனம் நிறுவப்பட்டது. சைக்கிள் உற்பத்தி கைத்தொழில் இலங்கைக்கு போட்டி மிகுந்த ஒரு கைத்தொழிலாகும். அந்தப் போட்டியான துறைக்கு முறையான நடவடிக்கைகள் அவசியமாகும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாரிக் தெரிவித்தார்.

இலங்கையில் சைக்கிள் உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள லுமாலா அரசாங்கத்தால் கிடைக்கும் பாதுகாப்பின் கீழ் நடத்தப்படும் ஒன்றல்ல என்பது மிகவும் தெளிவானது. ஆனால் ஏனைய தேசிய கைத்தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை இந்த கைத்தொழிலும் முகம்கொடுக்கிறது. இவ்வாறான தேசிய கைத்தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக விசேட திட்டமொன்று அரசால் தயாரிக்கப்பட வேண்டியது காலத்துக்கேற்ற தேவையாகும். எவ்வளவுதான் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள் சந்தைக்கு வந்தாலும் நிச்சயமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் போட்டித் தன்மையை தொடர்ந்தும் பேணக் கூடிய தரச்சான்றிதழை பெற்றுக்கொடுக்க லுமாலாவினால் முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT