உலகளாவிய நிலையான போக்குவரத்து மன்றம் 2023 ஆரம்பிக்கப்பட்டமை குறித்து போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். “இம்மன்றத்தின் நோக்கத்தை நனவாக்குவதற்கு உழைத்த மற்றும் பங்களிப்புச் செய்த சகலருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவான பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்” எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“உலகளாவிய நிலையான போக்குவரத்து மன்றம் 2023 என்பது இலங்கையில் பேருந்துகள் மற்றும் ரயில்களை பெரிதும் நம்பியிருக்கும் பொதுப்போக்குவரத்து அமைப்பு பற்றியதாகும். இந்த வெகுஜன போக்குவரத்து முறைகள் மொத்த பயணிகளில் 73 வீதம் பேருக்கு சேவை செய்கின்றன. 68 வீதம் பேர் பொதுப்பேருந்துகளில் பயணிக்கின்றனர். வருடத்திற்கு 120 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை
ரயில்வே துறையானது, பயணிகளின் தேவையில் 5 வீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது.
போக்குவரத்துக்கான அனைத்து எரிபொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இலங்கை சமீபத்தில் Euro 4 உமிழ்வு தரநிலைகளை ஏற்றுக்கொண்டது.ஆனால் பொருத்தமற்ற வாகனங்கள் அதிக மாசு மற்றும் GHG உமிழ்வை ஏற்படுத்துகின்றன.
முதலீடுகள் மற்றும் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் இருந்தபோதிலும், மோசமான தரம், குறைந்த வசதி, மெதுவான வேகம், அடிக்கடி தாமதங்கள், செயற்றிறன் குறைதல் ஆகியவற்றுடன் பொதுப்போக்குவரத்தின் நிலை எதிர்பார்ப்புகளுக்குக் குறைவாகவே உள்ளது.
இது, பயணிகள் பொதுப்போக்குவரத்திலிருந்து தனியார் முறைகளுக்கு மாறுவதற்கு வழிவகுத்தது. பொருளாதாரம்,
சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தையும் இந்நிலைமை பாதிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.