கொழும்பு துறைமுக நகரம் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் ஊக்கச் சலுகைகள் குறித்து அறிவூட்டுவதற்காக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஊக்குவிப்பு நிகழ்வொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிகழ்வு முக்கிய உலகளாவிய சந்தைப்படுத்தல் பிரசாரத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளதுடன், துறைமுக நகரத்தில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
ஐக்கிய அரபு இராச்சியம், இந்திய- பசிபிக் பிராந்தியத்திற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் இந்த புதிய போக்கு அதிகரிக்கும் வேகத்தின் பின்னணியில் இலங்கையின் வகிபாகம் குறித்து இடம்பெறவுள்ள பிரத்தியேகமான அமர்வில் ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் உரையாற்றவுள்ளார்.
இந்திய-பசிபிக் பிராந்தியம் உட்பட பல கூட்டாளர்களுடன் ஒரே நேரத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சர்வதேச செயல்பாட்டாளராக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வகிபாகத்தை இந்த கலந்துரையாடல் வெளிப்படுத்தும். 2040 ஆம் ஆண்டளவில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஆசியாவே பிரதிநிதித்துவப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 21 ஆம் நூற்றாண்டின் புதிய பொருளாதார உலகளாவிய வலு மையமாக ஆசியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
இதன் பின்னணியில் ஐக்கிய அரபு இராச்சியமானது இந்திய-பசிபிக் பிராந்தியத்துடனான தனது தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இலங்கை அதன் வர்த்தக மற்றும் முதலீட்டு சலுகைகளுடன், குறிப்பாக செயல்படவிருக்கும் பல பில்லியன் டொலர் மதிப்பு மிக்க கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இந்த கூட்டாண்மையில் முக்கிய பங்கை வகிக்கும்.
கொழும்பு துறைமுக நகரத்தின் ஐக்கிய அரபு இராச்சிய ஊக்குவிப்பு நிகழ்வு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) அண்மையில் அதன் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கான (BSI) வழிகாட்டுதல்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்று குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினை எட்டியுள்ளது.
உலகளாவிய ரீதியில் போட்டியிடும் திறன் வாய்ந்த விசேட பொருளாதார வலயமாக கொழும்பு துறைமுக நகரத்தை மாற்றுவதற்கான அர்ப்பணிப்பினை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கொழும்பு துறைமுக நகரத்தின் மூலோபாய அமைவிடம் அதன் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாகும். ‘தெற்காசியாவிற்கான நுழைவாயில்’என நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்நகரம், பிராந்தியம் முழுவதும் வர்த்தகம், வாணிபம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கான முக்கிய மையமாக செயல்பட தயாராக உள்ளது.