சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கையின் பல பாகங்களிலும் கடந்த 07 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது.
பார்வை குறைபாட்டுக்கான பரிசோதனை, அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல், வெண் படலங்களை அகற்றுதல், மருந்து வகைகளை விநியோகித்தல், மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல் போன்ற சேவைகள் இத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
இத்திட்டம் இதற்கு முன் பல வருடங்களாக சவூதி அரேபியா மூலம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டதை அனைவரும் அறிவர். இலங்கை மாத்திரமல்லாமல் பாகிஸ்தான், பங்களாதேஷ்,யெமன் மொரோக்கோ போன்ற நாடுகளிலும் பல ஆபிரிக்க நாடுகளிலும் இத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இச் சேவை மூலம் நன்மையடைகின்றன.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சவூதி அரேபியா முன்னணியில் இருப்பதை அதன் பல சேவைகள் ஊடாக அறியக் கிடைக்கிறது.
இத்திட்டம் இலங்கையில் சர்வதேச அல்பசர் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.கண் பார்வை சம்பந்தமான நோய்கள் பற்றிய விழிப்புணர்வுகளும் இம் மருத்துவ முகாமில் வழங்கப்படுகிறது.
மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் கீழ் பல்வேறு நாடுகளிலும் பார்வை குறைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சவூதி அரேபியா பல வருடங்களாக செய்து வருகின்றது.
சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகளை அல்-இஹ்ஸான் திட்டத்தின் கீழ் அல்-நூர் தொண்டு நிறுவனம் உலகில் பல பாகங்களிலும் செய்து வருகிறது.
இன மத பேதமின்றி இச்சேவையின் மூலம் பல்லாயிரக்கணக்கான வசதி குறைந்த மக்கள் பயனடைகின்றனர்.
அஷ்-ஷைக் பெளஸுல் அலவி (மதனி)
செயலாளர், தாருல் ஈமான் நிறுவனம், கொழும்பு-03