யாழ்.தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள், பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள், பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் கோரினார். இதையடுத்து ஒட்டகப்புலம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டு உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு (J/245), பலாலி வடக்கு (J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது.
இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் இலகுவாக பிரவேசிக்கக் கூடிய வகையில் பாதைகளை திறக்கவும், வீதிகளை பயன்படுத்தவும் அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரினர்.இதற்கிணங்க
பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடிய
ஆளுநர் அனுமதியை பெற்றுக்கொடுத்தார். பொன்னாலை – பருத்தித்துறை கடற்கரை வீதியில் கண்ணகி அம்மன் கோவில் சந்தியிலிருந்து நாகதம்பிரான் கோவில் வீதி ஊடாக விடுவிக்கப்பட்ட காணிக்குள் தற்போது பிரவேசிக்க முடியும்.
வீரப்பளை வீதியில் பலாலி வீதி நோக்கி 100 மீற்றர் தூரத்துக்குள்ளும், வீரப்பளை சந்தியில் தெற்கு நோக்கி தம்பாளை வீதி (விமான நிலைய வீதி ) ஊடாகவும் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
(யாழ்.விசேட நிருபர்)