திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (22) பதிவாகியுள்ளது.
திருகோணமலை- திருஞானசம்பந்தர் வீதியில் வசித்து வந்த 53 வயதுடைய கனகரத்னம் சிவக்குமார் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சாம்பல்தீவு கடற்கரைக்கு ஆறு பேர் கொண்ட குழு சென்றதாகவும், அதில் மூவர் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸார் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று (23) இடம்பெறவுள்ளதாகவும், மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல்சலாம் யாசீம்