வெறுப்புப் பேச்சுக்களால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் இழந்தாலும் எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
டயனா கமகே பிரிட்டன் பிரஜையாக இருப்பதால் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் நேற்று (09) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட டயனா கமகே, “நான் நீதித்துறையை மதிக்கிறேன். இதற்குப் பின்னால் அரசியல் சதி உள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் மாற்றமில்லையென்றால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியே செல்லுப்படியற்றதாக மாறும். ஏனென்றால் அந்த கட்சி என் கையெழுத்துடன் ஆரம்பமானது. அதற்குள் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி நான் எதிர்காலத்தில் கூறுவேன்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமை வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த தாக்கம் ஒரு பெண்ணாக தன் மீது மட்டுமல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்த பெண்கள் மீதான தாக்கமாவே கருதுகிறேன் என்றும் அவர் கூறினார். நேற்று (09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே டயானா கமகே இந்த விடயங்களை குறிப்பிட்டார். இந்நாட்டு பெண்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பெண்களுக்கு மரியாதை செலுத்த தெரியாத முட்டாள்தனமான எதிர்கட்சித் தலைவர் வேண்டுமா? என்பது தொடர்பில் யோசிக்க வேண்டும்.
நான் எப்போதும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவேன். இக்கட்டானதொரு சூழ்நிலையில் இந்நாட்டை காப்பாற்றியவர் ரணில் விக்கிரமசிங்கவே. எனது அரசியல் இத்துடன் நிற்க போவதில்லை.
விரைவில் இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என தெரிவித்துள்ளார்.