மேற்கு ஆபிரிக்காவின் செனகலில் நேற்று (09) ஓடுபாதையில் இருந்து போயிங் 737 விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
முதற்கட்ட தகவல்களின்படி விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் செனகலில் உள்ள பிளேஸ் டியாக்னே சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து திடீரென சறுக்கி விழுந்தது. விமானம் புறப்படும் போது ஹைட்ராலிக் கோளாறு காரணமாக விமானத்தின் இடது இறக்கை மற்றும் என்ஜினில் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானி உட்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக மேற்கு ஆபிரிக்க விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் காரணங்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போயிங் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.