இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான முதலாவது மீளாய்வுக்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாம் குழுவொன்று கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக, அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் 14 முதல் 27 வரை நடைபெறவுள்ள திட்டத்தின் முதலாவது மதிப்பாய்வுக்காக குறித்த குழு இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையால், இலங்கை அதன் ஏழு தசாப்தங்களுக்கு மேலான காலப் பகுதியில் மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வரும் நிலையில், வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம், கடந்த மார்ச் மாதத்தில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்திருந்தது.
அதற்கமைய, இத்திட்டத்தின் ஜூன் இறுதி வரையான செயற்றிறனை அடிப்படையாகக் கொண்டு, திட்டத்தின் முதல் மதிப்பாய்வு செப்டெம்பர் 14 முதல் 27 வரை நடைபெறவுள்ளது. இம்மதிப்பாய்வானது, IMF பணிக்குழாம் மற்றும் நிர்வாகக் குழு ஆகிய இரு தரப்பினாலும் அங்கீகரிக்கப்பட்டால், சுமார் 338 மில்லியன் டொலர் கடனை வழங்க அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
IMF பணிக்குழாமானது இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் இலங்கைக்கு வந்திருந்தது. இதன்போது, ஒட்டுமொத்தமான பொருளாதார மற்றும் கொள்கை சூழலானது சவால் மிக்கது என, நிதியத்தின் அதிகாரிகள் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ரொய்ட்டர்ஸ்)