ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.எல் டி20 தொடரில் இலங்கையின் இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடவுள்ளார்.
ஐ.எல் டி20 தொடரின் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு சொந்தமான எம்.ஐ எமிரேட்ஸ் அணியில் இவர் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் விஜயகாந்த் வியாஸ்காந்த் தேசிய அணியை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இம்முறை 5 போட்டிகளில் விளையாடிய இவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எனினும் கடந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் திறமையை வெளிப்படுத்தியிருந்த இவர், தொடரின் சிறந்த வளர்ந்துவரும் வீரராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வியாஸ்காந்த் மும்பை எமிரேட்ஸ் அணியில் இணைந்துள்ளதுடன், அந்த அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளினதும் தலைமை அதிகாரியாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன செயற்பட்டு வருகிறார்.
இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐ.எல் டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.