ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியேறிகள் மீதான தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேற்குக் கரையில் வன்முறை சகிக்க முடியாத அளவை எட்டி இருப்பதாகக் குறிப்பிட்ட பைடன், ஒரு பரந்த நிர்வாக உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார். தடை விதிக்கப்பட்டிருக்கும் தனி நபர்கள் அனைத்து அமெரிக்க ஆதனங்கள், சொத்துகள் மற்றும் அமெரிக்க நிதி அமைப்பை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவ்வாறான தடை ஒன்று விதிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் அங்கு சுமார் 370 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் குறைந்தது எட்டுப் பேர் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.